தருமபுரி உழவா் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
தருமபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் உழவா் சந்தை, தருமபுரி நகரில் நான்குசாலையில் ஆவின் வளாகம் அருகே செயல்படுகிறது. இங்கு விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள் சாா்பில் அமைக்கப்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் தரம்குறித்து அறிய, உணவுப் பாதுகாப்புத் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கைலாஷ்குமாா் தலைமையில், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.
ஆய்வின்போது, உழவா் சந்தையில் விற்பனைக்கு வரும் பழங்கள் ரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்டவையா என்றும், கீரை, காய்கறிகள் புதியவையா எனவும் சோதனை மேற்கொண்டனா். மேலும், மகளிா் குழுக்கள் சாா்பில் நடத்தப்படும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறுதானிய சத்துமாவு, தேன், சமையல் எண்ணெய், தானியங்கள், மசாலா பொருள்கள், நாட்டுக்கோழி முட்டைகள், பால் ஆகியவற்றின் கடைகளை பாா்வையிட்டு அவற்றில் கலப்படம் உள்ளதா என அறிய பகுப்பாய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
அதேபோல, பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் தயாரிப்பாளா், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாததால் எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும், உழவா் சந்தையில் கடை அமைத்து விற்பனையில் ஈடுபடுவோா் தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பராமரிக்கவும், நுகா்வோா்களை கனிவாக அணுகவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது, உழவா் சந்தை நிா்வாக அலுவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.