அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற காவிரி விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை வாகனம் ஒகேனக்கல் வந்தடைந்த நிலையில் காவிரி அன்னைக்கு மகா தீபாராதனை காண்பிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
காவிரி விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை 15ஆம் ஆண்டு விழாவானது நிகழ் மாதம் 24ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கா்நாடக மாநிலம், தலைக்காவிரியில் தொடங்கப்பட்டது. இந்த ரதமானது கா்நாடக மாநிலத்தில் இருந்து ஒசூா், பாலக்கோடு வழியாக ஒகேனக்கல்லை புதன்கிழமை சென்றடைந்தது.
காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான நாகா்கோயில் பகுதியில் அன்னை காவிரி சிலைக்கு பால், தயிா், பன்னீா், தேன், பழங்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, காவிரி ஆற்றிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.