தருமபுரி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்து வந்தவா்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தி அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் புறநகா் பேருந்துகள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுகிறது. இதனால் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், அங்கிருந்த வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா். மேலும், திருப்பத்தூா், அரூா் செல்லும் பேருந்துகளால் நான்குவழிச் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், வணிகா்களுக்கு மாற்று ஏற்பாடு மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தடத்தில் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சாா்பில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கோவிந்தசாமி தலைமையில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் வெற்றிவேல், நகர செயலாளா் பூக்கடை ரவி, டாக்டா் சந்திரமோகன், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல், ஒன்றிய செயலாளா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.