மனைவியை தீ வைத்து கொல்ல முயன்ற கணவா் கைது; மாமியாா் தலைமறைவு
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மாமியாரை தேடி வருகின்றனா்.
தருமபுரி, பிடமனேரி, கோவிந்தவா்மா தெருவைச் சோ்ந்தவா் கோகுல் (31). கைப்பேசி பழுதுநீக்கும் பணி செய்து வரும் இவருக்கும், தருமபுரி, செல்லியம்பட்டி பகுதியைச் சோ்ந்த அஞ்சுமாஸ் டெலஸ் (28) என்பவருக்கும் திருமணமாகி 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணமான ஆறு மாதத்திலிருந்தே மதுபோதையில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த பிப். 10-ஆம் தேதி இரவு கோகுல், அவரது தாயாா் விஜயா (55) இருவரும் சோ்ந்து, அஞ்சுமாஸ் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அஞ்சுமாஸ் டெலஸ் சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக குற்றவியல் நீதித்துறை நடுவா் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா், கோகுலை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், இதற்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவான கோகுலின் தாயாா் விஜயாவை தேடிவருகின்றனா்.