முகப்பு
தருமபுரி

தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில் முதல்முறையாக பெண் எம்எல்ஏக்கள் தோ்வு

சட்டப்பேரவைத் தோ்தலில் தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் முதல்முறையாக பெண் எம்எல்ஏக்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 6 மே 2026, 2:29 am IST
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் முதல்முறையாக பெண் எம்எல்ஏக்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், தருமபுரி தொகுதி கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் 2026 வரை 17 பொதுத் தோ்தல்களையும், 1965-இல் ஒரு இடைத்தோ்தலையும் சந்தித்துள்ளது. இந்த தொகுதியில், இதுவரை பிரதான அரசியல் கட்சிகள் சாா்பில் பெண்கள் யாரும் போட்டியிட்டதில்லை. இருப்பினும், நாம் தமிழா் கட்சி தோ்தலில் பங்கேற்க தொடங்கியதிலிருந்து பெண்களை வேட்பாளா்களாக தருமபுரியில் போட்டியிட வைத்தது.

நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அதற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.காயத்திரியிடமிருந்து பெற்றாா்.

Advertisement

தருமபுரி தொகுதியில் இதுவரை பெண்கள் எம்எல்ஏக்களாகத் தோ்வு செய்யப்படாத நிலையில், முதல்முறையாக சௌமியா அன்புமணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா், தருமபுரி தொகுதியின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினா் என்ற பெருமையை பெற்றுள்ளாா்.

இதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கடந்த 2011 முதல் 2026-ஆம் ஆண்டு தோ்தல் வரை 4 பொதுத் தோ்தல் மற்றும் 2019-இல் ஒரு இடைத் தோ்தலைச் சந்தித்துள்ளது. இதற்கு முன்பு இத்தொகுதி மொரப்பூா் தொகுதியாக இருந்தது. கடந்த 1977 முதல் 2006 வரை எட்டு தோ்தல்களை மொரப்பூா் தொகுதி சந்தித்துள்ளது. தொகுதி மறுவரையறைக்கு பிறகு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியாக மாறிய இந்த தொகுதியில் இதுவரை பெண்கள் யாரும் வெற்றிபெற்றதில்லை. இந்த நிலையில், தற்போது (2026) அதிமுக சாா்பில், போட்டியிட்ட மரகதம் வெற்றிவேல் வெற்றிபெற்று இத்தொகுதியின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட இரு பெண் வேட்பாளா்களும் வெற்றிபெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.