தேன்கனிக்கோட்டை அருகே வட்ட வடிவு பாறை பகுதியில் முகாமிட்டிருந்த 70 யானைகளை வனத் துறையினர் நொகனூர் காட்டுக்கு புதன்கிழமை விரட்டினர்.
கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 70 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் நுழைந்துள்ளன.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வட்ட வடிவு பாறை பகுதியில் தற்போது முகாமிட்டுள்ள இந்த 70 யானைகள் லக்கசந்திரம், பேவநத்தம், பாலேகுளி, மேகலகவுண்டனூர், திம்மசந்திரம், கலகோபசந்திரம், ஜார்கலட்டி, மாரசந்திரம் ஆகிய பகுதியில் ராகி, அவரை, துவரை, சோளம், தக்காளி பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் யானைகளை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை வட்ட வடிவு பாறை பகுதியில் முகாமிட்டிருந்த 70 யானைகளை விடிய, விடிய பட்டாசுகள் வெடித்தும், மேளத் தாளங்களை அடித்தும் ஆலல்லி காட்டுக்குள் விரட்டினர்.
தொடர்ந்து நொகனூர் காட்டு வழியாக கர்நாடக வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டாக வனத் துறையினர் தெரிவித்தனர். புதன்கிழமை இந்த யானைகள் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.