டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, பெல்லாரம்பள்ளி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெல்லாரம்பள்ளி கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டது. மதுக் கடையைத் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ஒன்றரை மாதத்தில் கடையை மாற்று இடத்துக்கு மாற்றப்படும் என அலுவலர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.
தொடர்ந்து இந்த டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்ட நிலையில், அரசு அலுவலர்கள் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், டாஸ்மாக் மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களை சமாதானப்படுத்தினர். 15 நாள்களில் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.