அரசுப் பள்ளி ஆசிரியரிடம் உள்ள மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மோரமடுகு கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் பரத்வாஜ் (17), தன் குடும்பத்தினருடன் வந்து ஆட்சியரிடம் அளித்த மனுவின் விவரம்: நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று, அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது எனது தம்பி பிரிதிவிராஜ் 10-ஆம் வகுப்பிலும், தங்கை விஷ்ணுபிரியா 8-ஆம் வகுப்பில் படித்து வந்தனர்.
இந்த நிலையில், கூலித் தொழிலாளியான எனது தந்தை, எனது தாத்தாவின் பெயரில் இருந்த அரசு இலவசமாக வழங்கிய வீட்டை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சங்கரம்மாளிடம் அடமானம் வைத்து ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார். எனது தந்தையால் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் வீட்டை இழந்தோம். மேலும், எனது மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை ஆகியவற்றை அவர்கள் எடுத்துச் சென்றனர். இதனால், எனது கல்வி தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இத்தகைய நிலையில், எனது சான்றிதழ்கள் சங்கரம்மாள் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியை சாந்தி, அவரது கணவர் அச்சுதானந்தன் ஆகியோரிடம் உள்ளது. எனவே, அதை மீட்டுத் தருமாறு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.