இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளியில் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, தெரிவித்தார்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் கல்வி ஆண்டுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மொத்தம் 3,211 இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பெற்றோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வந்துவிடும். மேலும், அனைத்து கல்வி அலுவலகங்களிலும் கட்டணம் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இ-சேவை மையங்களிலும் பதிவேற்றம் செய்யலாம். அதிக விண்ணப்பங்கள் பெறப்படும் இடங்களில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பெற்றோர்கள் ஏப்.20 முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என
தெரிவித்துள்ளார்.