இயற்கை இடர்பாடுகளால் சிக்கியுள்ள கேரளத்துக்கு உதவுமாறு பொதுமக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேரளத்தில் மழை, நிலச் சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளில் சிக்கி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண உதவிகளைப் பெற்று கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு தினசரி காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, இடர்பாடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், வணிக சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சமூக நல அமைப்புகள், நலச் சங்கங்கள் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி, உணவு, உடை மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கு தேவையான வகையில் பொருள்களை உதவுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.