உரக்கடை உரிமையாளரிடம் திருட்டு
ராயக்கோட்டையில் உரக்கடை உரிமையாளரிடம் ரூ.2 ஆயிரம் திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
ராயக்கோட்டையில் உரக்கடை உரிமையாளரிடம் ரூ.2 ஆயிரம் திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை ஆர்.ஏ.கே.நகரைச் சேர்ந்தவர் சேகர் (44). இவர் ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், சேகர் சட்டை பையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தைத் திருடினார். இதை கவனித்த சேகர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரைப் பிடித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் அருகே உள்ள ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனிராஜ் (37) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் லாரி ஓட்டுநர் பலி
சூளகிரி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
மத்திகிரி சிப்பாய்பாளையத்தைச் சேர்ந்தவர் தில்பாஷா ( 51). லாரி ஓட்டுநர். இவர் இருசக்கர வாகனத்தில் ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுண்டகிரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த தில்பாஷாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி காவல் ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.