அஞ்செட்டி அருகே சோழர் கால கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டெடுப்பு
அஞ்செட்டி அருகே சோழர் கால கல்வெட்டுடன் கூடிய நடுகல்லை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் மணிமேகலை பொறியியல்
அஞ்செட்டி அருகே சோழர் கால கல்வெட்டுடன் கூடிய நடுகல்லை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் இயங்கி வரும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் மனோகரன், செயலாளர் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தேன்கனிக்கோட்டை வட்டார பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் பரந்தாமன், சுகவனமுருகன் மற்றும் அன்பரசு ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த கள ஆய்வில் சோழர் கால கல்வெட்டுடன் கூடிய நடுகலை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ளது மிலிதிகி என்னும் கிராமம். இந்தக் கிராமத்தின் மேற்கு திசையில் ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. கல்திட்டைகளைக் கொண்டு மூன்று அறைகள் போன்று காணப்படும் முதல் அறையின் வலது திசையிலும், மூன்றாவது அறையின் இடது திசையிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றன.
மேலும், இந்த அறைகளுக்கு பின்புறம் ஒரு கல்லில் கல்வெட்டு காணப்படுகிறது.
இந்தக் கல்வெட்டு முழுமையாக கிடைக்கவில்லை. இந்தக் கல்வெட்டில் சோழ மன்னனான மூன்றாம் குலோத்துங்கனின் (கி.பி.1178-1218) மெய்கீர்த்தி காணப்படுகின்றன. மேலும், இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி காணப்படவில்லை. ஆதலால் இந்தக் கல்வெட்டின் செய்தியினை முழமையாக அறியமுடிவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.