தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன விவகாரத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதிமுக அரசு செயல்படும் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
தனது தாயாரின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த வியாழக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூருக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. ஆனால், அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றதால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது என தமிழக முதல்வர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள், பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் மக்கள் நலனுக்காக மட்டுமே இந்த அரசு செயல்படும். மக்கள் நலன் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது. தூத்துக்குடியில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. தென்னிந்தியாவில் தேசியக் கட்சிகள் வெற்றி பெறாது. நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகம், காவிரி நீரை திறந்துவிடும் எனத் தெரிவித்தார் அவர்.