ஹீலகம் ஏரிக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க நடவடிக்கைக் கோரி மனு அளிப்பு
ஹீலகம் ஏரிக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தன
ஹீலகம் ஏரிக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேன்கனிக்கோட்டை வட்டம், கொப்பகரை ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்:
கொப்பகரை ஊராட்சிக்கு உள்பட்ட செங்கோடசின்னஅள்ளி, சிங்காரப்பேட்டை, கள்ளுகான்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். இங்குள்ள ஹீலகம் ஏரியின் மூலம் 800 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரிக்கு பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காசிநாயக்கனஅள்ளி (கடவரஅள்ளி) அணையிலிருந்து காய்வாய் மூலம் நீர்
வருகிறது.
இத்தகைய நிலையில், சிலர், கால்வாயில் தடுப்பணைகள் அமைத்து, ஹீலகம் ஏரிக்கு தண்ணீர் வருவதைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், ஹீலகம் ஏரி வறண்டு, விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே, ஹீலகம் ஏரிக்கு தடையில்லாமல் தண்ணீர் வர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.