முகப்பு
கிருஷ்ணகிரி

இனாம்தாரி நிலங்களுக்கு பட்டா:  ஒசூரில் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு

இனாம்தாரி நிலங்களுக்கு பட்டா வழங்க ஒசூரில் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி  ஞாயிற்றுக்கிழமை  திறந்துவைத்தார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:31 AM
பகிர்:

இனாம்தாரி நிலங்களுக்கு பட்டா வழங்க ஒசூரில் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி  ஞாயிற்றுக்கிழமை  திறந்துவைத்தார்.
ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 
ஒசூர்  வட்டம், பாகலூர் சாலையில் உள்ள மாரசந்திரம், சென்னசந்திரம், இளையசந்திரம், திம்மசந்திரம்,  உளியாளம், பைரசந்திரம் ஆகிய கிராமங்களில் இனாம்தாரி நிலம் (ஜீரோ பைமாஸ் நிலம்) 3,800 ஏக்கர் உள்ளது. இந்த நிலங்களுக்கு சர்வே எண் கிடையாது. எனவே, இந்த நிலங்களுக்கு சர்வே எண், பட்டா வழங்க  இந்த சிறப்பு வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 
ஏற்கெனவே நவீன கருவிகளைக் கொண்டு தமிழக வருவாய்த் துறையினர் சர்வே செய்து அளவீடு செய்துள்ளனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த  விவசாயிகள் மற்றும் நில  உரிமையாளர்கள் தங்களிடம் இருக்கும் உரிய ஆவணங்களை சரிசெய்து புதிய பட்டா, சர்வே எண் வழங்கப்படவுள்ளது. 
இந்தப் பணி ஓராண்டுக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியர் செந்தில் தலைமையில் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் என மொத்தம் 9  பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர், முன்னாள்  எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ், முன்னாள் சூளகிரி ஒன்றியக்குழுத் தலைவர் ஏவிஎம் மது(எ)ஹேம்நாத், மாவட்ட  வருவாய் அலுவலர் சாந்தி, தனி வட்டாட்சியர் செந்தில், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் வாசுதேவன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கூறியது:
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில்,  வருவாய்த் துறை சார்பில் முழுமையாக சர்வே செய்து முடிக்கப்பட்டுள்ளது.  இனாம்தாரி நிலங்களுக்கு நவீனமுறையில் அளவீடு செய்து நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் இந்த 7 கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த 7 கிராமங்களில் 3,800 ஏக்கர் நிலங்களில் சுமார் 1000 ஏக்கர் அளவில் கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்ட போது அரசு எடுத்துக் கொண்டது. மீதமுள்ள நிலங்களுக்கு தற்பொழுது நவீன முறையில் அளவீடு செய்து நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்க இந்த அலுவலகம் செயல்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.