ஒசூர் நகராட்சியில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. ஒசூர் நகராட்சி குடிநீர் வடிகால் வாரியப் பிரிவு அலுவலகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒசூர் நகராட்சி பழைய அலுவலகத்தில் போதிய இட வசதி இல்லாததால், பாகலூர் சாலையில் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.2 கோடியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகம் முழுவதும் மர வேலைப்பாடுகளுடன் அதிக பொருள் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புகை வந்தது. அப்போது காவல் பணியில் இருந்த காவலர்கள் இதுகுறித்து ஒசூர் அட்கோ காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஒசூர் அட்கோ போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று அலுவலகத்தில் இருந்த தீயணைப்புக் கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் நகராட்சி அலுவலகம் முழுவதும் இருளில் மூழ்கியது. இந்த விபத்தில் நகராட்சி ஆவணங்கள் மற்றும் கணினிகள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதா, சேதமதிப்பு எவ்வளவு என்பது சனிக்கிழமை காலை அலுவலகம் திறந்து பார்த்த பிறகே தெரியும் என போலீஸார்
தெரிவித்தனர்.
கடந்த வாரம் ஒசூர் நகராட்சி அலுவலராக இருந்த செந்தில்முருகன் மாறுதல் செய்யப்பட்டு கரூரில் பணியாற்றி வந்த நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் புதிய ஒசூர் நகராட்சி ஆணையராக பதவி ஏற்ற நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.