குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரைக் கொன்று பணத்தை கொள்ளையடித்த கும்பல் குறித்து போலீஸார் துப்பு துலக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக திருச்சி மாவட்டம், முறிசி அருகே உள்ள காவேரி நகரைச் சேர்ந்த ராஜா (45), பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் இருந்த போது, மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ராஜாவை கத்தியால் குத்திக் கொன்று ரூ.3.35 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.
விசாரணையில், டாஸ்மாக் கடையில் மதுப் புட்டிகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் கும்பல் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், சம்பவத்தின் போது காயமடைந்த நல்லானூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது.இதையடுத்து, அவரிடம் போலீஸார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், கொள்ளையடித்த பணத்தை, அங்குள்ள விவசாய நிலத்தில் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.