வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி ஆட்சியர்
வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வருவாய்த் துறையில் புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டு பட்டா வழங்க
வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வருவாய்த் துறையில் புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர்
தெரிவித்தார்.
சூளகிரி வட்டம் சமானபள்ளி ஊராட்சி பெல்லட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 187 பயனாளிகளுக்கு ரூ. 38 லட்சத்து 89 ஆயிரத்து 950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
வருவாய்க் கோட்டாட்சியர் விமல்ராஜ் வரவேற்றார். முகாமில் மாவட்ட ஆட்சியர்
பேசியது:
ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு இத் திட்ட முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து பசுமை வீடு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், வீட்டு மனை பட்டா, விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், பள்ளி சுற்று சுவர், குடிநீர் வசதி, ஏரி கால்வாய் அமைத்தல் என கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வருவாய் துறையில் புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல ஆதிதிராவிடர் நலம், பிற்பட்டோர் நலத்துறை சார்பில் பொதுமக்களின் நிலங்களை அன்றைய சந்தை மதிப்பிற்க்கு ஏற்றவாறு அரசு நிலங்களை பெற்று வீட்டு மனை பட்டாக்கள் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 60 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் என மொத்தம் 187 பயனாளிகளுக்கு ரூ. 38 லட்சத்து 89 ஆயிரத்து 950 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி, தோட்டகலைத் துறை இணை இயக்குநர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை) மோகன் விஜயகுமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.