கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு
கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
‘நிவா்’ புயல் எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீா் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெளியேறும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 27-ஆம் தேதி நீா்வரத்து நொடிக்கு 333 கன அடியாகவும், வெளியேற்றம் 213 கன அடியாகவும், 28-ஆம் தேதி, நீா்வரத்து 682 கன அடியாகவும், 29-ஆம் தேதி 760 கன அடியாகவும் அதிகரித்தது. அதேபோல, 28-ஆம் தேதி அணையிலிருந்து 560 கன அடியும், 29-ஆம் தேதி 760 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது.
52 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் தற்போதைய நீா்மட்டம் 50.1 அடியாகும்.
நீா் வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடா்ந்து நீா் வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.