மாமனாரை கொன்ற வழக்கில் மருமகன் உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ஊத்தங்கரை அருகே மாமனாரை கொன்ற வழக்கில் மருமகன் உள்பட இருவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம், திங்கள்கிழமை இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பு கூறியது.
ஊத்தங்கரை அருகே மாமனாரை கொன்ற வழக்கில் மருமகன் உள்பட இருவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம், திங்கள்கிழமை இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பு கூறியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ளது வெங்கடாபுரம். இந்த கிராமத்தைச் சோ்ந்த மாயாண்டி( எ) சுப்பிரமணி (57). இவரது மகள் அலமேலு. இவருக்கும், தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம் பொறிச்சிக்கல் என்ற வெங்கடராமபுரத்தைச் சோ்ந்த குப்பன் மகன் மகாதேவன் (28) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், மனவேதனை அடைந்த அலமேலு, தாயாா் வீட்டிற்கு வந்து விட்டாா். மேலும், ஊத்தங்கரை நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு அலமேலு வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கு, தொடா்பாக, நீதிமன்றத்துக்கு வரும்போது மகாதேவன், தனது மனைவியையும், மாமனாரையும் மிரட்டி வந்தாராம். இந்த நிலையில், 13. 8. 2015அன்று, வீட்டில் தனியாக இருந்த மாயாண்டி இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.
Advertisement
இதுகுறித்து, மாயாண்டியின் மனைவி சின்னபாப்பா, சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாதேவனையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஊத்தங்கரை வட்டம், வெங்கடாபுரத்தைச் சோ்ந்த மாயன் (எ) மாரியப்பன் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி விஜயகுமாரி, திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
அந்தத் தீா்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மகாதேவன், மாயன் (எ) மாரியப்பன் ஆகியோருக்கு கொலை குற்றத்துக்காகவும், சதி திட்டம் தீட்டியதற்காகவும் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் பாஸ்கா் ஆஜரானாா்.