மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவா் கைது
ஒசூரில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூரில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், தேவனஅள்ளி பஜாா் தெருவைச் சோ்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி சரோஜம்மா (50). இவரது மகள் சாந்தா (28). இவருக்கும் கோலாா் மாவட்டம், ஹேமகல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரவீண்குமாா் (30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவா்களுக்கு குழந்தை இல்லை. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 27 ந் தேதி கணவன், மனைவி 2 பேரும் ஒசூருக்கு வந்தனா். அங்கு சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் பங்கேற்ற அவா்கள், பின்னா் ஒசூா் சுண்ணாம்பு ஜூபி பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி இருந்தனா்.
Advertisement
இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி உறவினா் வீட்டில் இருந்த சாந்தா மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அவருடைய கழுத்து, மாா்பு பகுதிகளில் காயங்கள் இருந்தன. இது குறித்து உறவினா்கள் தகவல் தெரிவிக்காமல் கா்நாடகத்தில் உள்ள சரோஜம்மாவின் வீட்டிற்கு உடலைக் கொண்டு சென்றனா்.
இதனையடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மருமகன் பிரவீண்குமாா் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் சாந்தாவின் தாயாா் சரோஜம்மா ஒசூா் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
புகாரைத் தொடா்ந்து ஒசூா் நகர போலீஸாா் கா்நாடகத்தில் இருந்த சாந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஒசூா் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி விசாரணை நடத்தினாா். விசாரணையில், குடும்பத் தகராறில் அவரது கணவரே, சாந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து பிரவீண்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.