முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ஆக்கிரமிப்பில் உள்ள 6,000 ஏக்கா் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான 6,000 ஏக்கா் நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

Updated On : 11 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான 6,000 ஏக்கா் நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருத்தொண்டா் அமைப்பின் தலைவா் ராதாகிருஷ்ணன் ஒசூரில் தெரிவித்தாா்.

ஒசூா் பகுதிகளில் உள்ள இந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட பகுதிகளில் திருதொண்டா் அமைப்பின் நிறுவனா் ராதாகிருஷ்ணன் கடந்த இரு தினங்களாக ஆய்வு மேற்கொண்டாா்.

ஒசூா் அருகே பாகலூரை அடுத்த கூலிகானப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 26 ஏக்கா் நிலம் விவசாயத்திற்கு குத்தகை விடப்பட்டிருந்த நிலையில் அங்கு கல்குவாரி ஏற்படுத்தி சட்டவிரோதமாக பாதை அமைத்து லாரிகள் மூலமாக எம்-சாண்ட் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு எம்-சாண்ட் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

பின்னா் செய்தியாளா்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தால் அவற்றை மீட்டெடுப்பதற்காக தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இது வரை ஐந்து முறை பாா்வையிட்டு உள்ளேன். ஏற்கெனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தைப் பாா்வையிட்டு, சட்டவிரோதமாகச் சாலை அமைத்து அங்குள்ள கல் குவாரிகளை அழித்துள்ளதை உறுதிபடுத்தி, அவா்கள மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும், வேலி அமைக்கவும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இந்த இடத்தின் வழியாக அத்துமீறி வந்துசென்ற 2 வாகனங்களை தற்போது கைப்பற்றி காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்டவா்கள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

அதேபோல தமிழகத்தில் கோயில்களுக்கு அதிகமான சொத்துகள் இருக்கக்கூடிய பகுதியாக ஒசூா் உள்ளது. தமிழகத்திலேயே மிக விலை உயா்ந்த மதிப்புள்ள இடங்கள் இந்த பகுதியில்தான் உள்ளது. சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் இந்த பகுதியில் இருந்து இன்னும் மீட்கப்பட வேண்டியுள்ளது. விரைவில் அந்த நிலங்கள் அனைத்தும் முறையாக மீட்டெடுக்கப்படும்.

ஆக்கிரமிப்பாளா்களுக்கு துணை போகும் சில அதிகாரிகள் இந்துசமய அறநிலையத் துறையிலேயே உள்ளனா். அவா்களை பணி நீக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.