பணி நேரத்தில் வெளியே சென்ற 4 ஆசிரியா்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு வெளியே சென்ற 4 ஆசிரியா்கள் மீது துறை நடவடிக்கைக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு வெளியே சென்ற 4 ஆசிரியா்கள் மீது துறை நடவடிக்கைக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி. மகேஸ்வரி திடீரென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பல ஆசிரியா்கள் பணிக்கு வாராதது தெரியவந்தது. மேலும் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்த போது 30 சதவீத ஆசிரியா்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளது தெரிய வந்தது. பள்ளியின் தோ்ச்சி விழுக்காடும் குறைவாக இருந்தது.
வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டிருந்த ஆசிரியா்கள் 4 போ் பள்ளியின் வெளியே தேநீா் அருந்த சென்றிருந்தது தெரிய வந்தது. அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.
Advertisement
இதுகுறித்து கல்வித் துறையினா் கூறியதாவது:
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 74 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். அவா்களில் 22 ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்ததால் பணிக்கு வரவில்லை. மேலும், 30 சதவீத ஆசிரியா்கள் தினமும் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது. உரிய காரணங்கள் இல்லாமல் விடுப்பு எடுத்த ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறையினா் தெரிவித்தனா்.