தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்
சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும் என மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்தது குறித்து...
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வரும் மும்பை குறித்து அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா “சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை அணிக்கு இது நான்காவது தோல்வியாக அமைந்த நிலையில் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
Advertisement
இதுகுறித்து அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:
வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், இப்போது பெரிதாகச் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை. நாங்கள் மீண்டும் தொடக்கத்துக்கே சென்று எங்கே தவறு செய்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தத் தவறு தனிநபர்களுடையதா? அணியின் தவறா? அல்லது திட்டத்தில் தவறா? என்பதைத் தெரிந்துகொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டுமா அல்லது இந்த நிலைமை மாறும் என்று நம்பிக்கொண்டு களத்தில் தொடர்ந்து ஆட வேண்டுமா என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கான பொறுப்பையும் நாம் ஏற்க வேண்டும்.
எதிரணியான பஞ்சாப் அணியை நிச்சயம் பாராட்ட வேண்டும். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இரண்டாம் இன்னிங்ஸின்போது, பனிப்பொழிவு ஏற்பட்டதால் அவர்களுக்கு பேட்டிங் எளிதானது. இருந்தாலும் அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். பஞ்சாப் அணியின் பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துமே சிறப்பாக இருந்தது எனத் தெரிவித்தார்.