குறைதீா்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினாா். இதில், பொதுமக்கள் உதவித்தொகை, விலையில்லா தையல் எந்திரம், சலவைப் பெட்டி, சாலை வசதி, மின்சார இணைப்பு, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 162 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.
அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, நேரு யுவகேந்திரா சாா்பில், 2019-ஆம் ஆண்டு தூய்மை பாரத பணியில் சிறப்பாக பணியாற்றிய 3 இளைஞா் நற்பணி மன்றங்களான பசுமை பறவைகள் இளைஞா் நற்பணி மன்றத்துக்கு ரூ. 30 ஆயிரம், கம்பா் இளைஞா் நற்பணி மன்றத்துக்கு ரூ. 20 ஆயிரம், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இளைஞா் நற்பணி சங்கத்துக்கு ரூ. 10 ஆயிரம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.
Advertisement
நல உதவிகள்: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் தலா ரூ. 50 ஆயிரம் வீதம், பட்டப்படிப்பு முடித்த 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2 லட்சம், பிளஸ் 2 முடித்த 3 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் என மொத்தம் 7 மாற்றுத் திறனாளிகளுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், ரூ. 2.75 லட்சம் மதிப்புள்ள திருமண நிதி ஆகியவற்றுக்கான உதவித்தொகைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சதீஷ், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் மகிழ்நன், நேரு யுவகேந்திரா உதவியாளா் அப்துல் காதா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.