தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு தெரிவித்தது பற்றி...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு பிஜு ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிஸாவின் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் முன்மொழியப்பட்டுள்ள மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கும் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒடிஸாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”தற்போது ஒடிஸாவின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 21 ஆகும். மொத்த மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையில் 3.9 சதவிகிதமாகும். ஆனால், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், ஒடிஸாவின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 29 ஆக உயரும். ஆனால், மொத்த எண்ணிக்கையில் 3.4 சதவிகிதமாக குறையும்.
ஆகையால், தொகுதி மறுவரையறை மசோதாவையும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் பிரித்து தனித்தனியாக தாக்கல் செய்ய வேண்டும். ஒடிஸாவின் பிரதிநிதித்துவப் பங்கு எந்த வகையிலும் குறைக்கப்படாமல் இருந்தால் மட்டுமே திருத்த மசோதவை ஆதரிக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் உள்ளேவும், வெளியேவும் குரல் எழுப்ப வேண்டும். நமது மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்க ஒன்றுபட்டு நிற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.