தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுனராம் மேக்வால் பேசியது பற்றி...
தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் இழப்பைச் சந்திக்காது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுனராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற 3 நாள் சிறப்பு அமர்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.
மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசிய மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், "நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Advertisement
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் அதிகரிப்பு இருக்கும். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 815-ஆக உயரும். இதில் 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இது அவையின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும். மேலும், எந்தவொரு மாநிலமும் தனது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்காது.
2026-க்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறைப் பணிகளுக்குப் பின்னரே மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும்" என்று கூறினார்.
இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும் அதுவரை மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.