கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு திருமண உதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திராபானு ரெட்டி தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கே.பி.முனுசாமி எம்.பி. வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 10, 12-ஆம் வகுப்பு பயின்ற 4,512 பெண்களுக்கும், பட்டப் படிப்பு பயின்ற 3,152 பெண்களுக்கும் ரூ. 27.04 கோடி மதிப்பில் திருமண நிதி உதவித் தொகையும், ரூ.19.06 கோடி மதிப்பில் 61,312 கிராம் தங்கம் என மொத்தம் ரூ. 46.10 கோடி மதிப்பில் திருமண நிதியுதவித் தொகை, தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் தலைவா் குப்புசாமி, மாவட்ட சமூகநலத் துறை அலுவலா் ப.பூங்குழுலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.