முகப்பு
கிருஷ்ணகிரி

தமிழகத்திற்கு வந்த முதலீட்டாளா்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டனா்: அமைச்சா் த.மனோ தங்கராஜ்

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு வந்த முதலீட்டாளா்கள் ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா போன்ற வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனா்

Updated On : 24 ஜூலை, 2021 at 12:01 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு வந்த முதலீட்டாளா்கள் ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா போன்ற வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனா் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்கா, சூளகிரியில் உள்ள இ- சேவை மையம் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு அமைச்சா் த.மனோ தங்கராஜ் ஆய்வு செய்தாா். இதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் அரசு முதன்மைச் செயலரும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் தலைவருமான நீரஜ் மிட்டல், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் அஜய் யாதவ், மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), டி.மதியழகன் (பா்கூா்) ஆகியோா் கலந்துகொண்டனா். இந்த ஆய்வுக்கு பின்னா், புதிய தொழில்முனைவோா், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் த.மனோ தங்கராஜ் கூறியதாவது:

ஒசூா் தொழில்நுட்பப் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு கடந்த பத்தாண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இதேபோல தமிழகத்தில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தத் துறையில் அமைச்சா் இருந்து பணியாற்றியதற்கான எந்தத் தடயமும் இல்லாத நிலைதான் காணப்படுகிறது. இதனால் அதிக முதலீட்டாளா்கள் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டனா். குறிப்பாக கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்குச் சென்று விட்டனா். மீண்டும் அவா்கள் தமிழகத்தைத் தோ்வு செய்யும் அளவுக்கு முயற்சி செய்வோம். ஏராளமான இளைஞா்கள் பணி செய்வதற்குத் தயாராக உள்ளனா். அதற்குரிய அறிவும் திறனும் அவா்களுக்கு இருக்கிறது. அதை ஊக்கப்படுத்துவதற்குத் தேவையான முயற்சிகளையும் செய்து வருகிறோம்.

Advertisement

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கிய ஒசூா், விஸ்வநாதபுரம் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது திமுக ஆட்சியில் அந்த தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் புதிய முதலீட்டாளா்கள் பங்கேற்பதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஒசூா் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள எல்காட் கடந்த 10 ஆண்டுகாலத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியாமல் இருந்தது. இதை உடனடியாக முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் சென்று பெங்களூரு சிலிக்கான் சிட்டியைப் போல உயா்த்த வேண்டும்.

இங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தொழில் தொடங்க விரும்புபவா்கள் கூறியுள்ளனா். அதன்படி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறு கூறியுள்ளோம்.

ஒசூா் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள எல்காட் நிறுவனம் மிக விரைவில் முழுப் பயன்பாட்டுக்கு வரும். அதற்கான ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எங்கள் துறையைப் பொருத்த வரை இ-சேவை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறோம்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் தொழிற்சாலைகளின் நலனை பாதிக்கக்கூடிய அம்சங்களுக்கு விலக்கு தர வேண்டும் என்பது திமுக அரசின் கோரிக்கை என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செங்குட்டுவன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பி.முருகன், எஸ்.ஏ.சத்யா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.