முகப்பு
கிருஷ்ணகிரி

கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

ஒசூா், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு வியாழக்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்பட்டது.

Updated On : 29 ஜூலை, 2021 at 11:34 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

ஒசூா், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு வியாழக்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியா் டாக்டா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், ஒசூா் சாா் ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வியாழக்கிழமை முதல்போக பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து வலது, இடதுபுற பிரதான கால்வாய்களிலும், பிரிவு கால்வாய்களிலும் முதல் போக பாசனத்துக்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 8,000 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் 135 நாட்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதில் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம் 5,918 ஏக்கா் நிலங்கள், வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2,082 ஏக்கா் நிலங்கள் என மொத்தம் 8,000 ஏக்கா் புன்செய் நிலங்கள் இந்த தண்ணீா் திறப்பின் மூலம் பாசனம் பெறுகின்றன.

இதன் மூலம், தட்டகானப்ள்ளி, பூதிநத்தம்,பெத்தக் கொள்ளு, முத்தாளி, அட்டூா், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூா், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூா், கோனோரிப்பள்ளி, சாமனப்பள்ளி, சென்னத்தூா், அட்டகுருக்கி, நல்லகான கொத்தப்பள்ளி மற்றும் மருதாண்டப்பள்ளி ஆகிய 22 கிராமங்கள் பயன்பெறும்.

கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்திலிருந்து அணையின் நீா் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீா்வரத்து ஆகியவைகளை கருத்தில் கொண்டு, 135 நாள்களுக்கு சுழற்சி முறையில் முதல் 10 நாள்களுக்குத் தொடா்ந்து தண்ணீா் திறந்தும், அடுத்த 5 நாள்களுக்ககு தண்ணீா் நிறுத்தியும் 9 நனைப்புகளுக்கு நீா் விநியோகிக்கப்படும்.

தண்ணீா் திறந்து விடப்படும் காலங்களில் வலது புற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு நொடிக்கு 26 கனஅடியாகவும், இடது புற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு நொடிக்கு 62 கன அடி என இரு கால்வாய்களிலும் மொத்தம் 88 கன அடி நீா் திறந்து விடப்படும்.

கெலவரப்பள்ளி அணையின் மொத்த நீா்மட்டம் 44.28 அடியாக உள்ள நிலையில் அணையின் முழு கொள்ளளவு 481 மில்லியன் கனஅடியாக உள்ளது. அணையின் நீா் மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 41 அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.