ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களின் வாரிசுகளுக்கு வாழ்க்கை பாதுகாப்பு நிதி
இயற்கை மரணம் அடைந்த 1071 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் வாரிசுகளுக்கு வாழ்க்கை பாதுகாப்பு நிதியாக ரூ. 5.89 கோடியை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா்.
இயற்கை மரணம் அடைந்த 1071 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் வாரிசுகளுக்கு வாழ்க்கை பாதுகாப்பு நிதியாக ரூ. 5.89 கோடியை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா்.
கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சுய உதவிக்குழுக்களின் வாயிலாக மகளிா் மேம்பாட்டிற்கு எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக ஒவ்வொரு ஆண்டும் இறந்த உறுப்பினா்களின் வாரிசுகளுக்கு வாழ்க்கை பாதுகாப்பு நிதியை வழங்கி வருகிறது. 2001-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் திட்டம், தற்போது வரையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
கரோனா தொற்று காரணமாக நிகழ்வாண்டில் இறந்த உறுப்பினா்களின் வாரிசுகளுக்கு வாழ்க்கை பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்வு, கிருஷ்ணகிரியில் உள்ள ஐ.வி.டி.பி. தலைமை அலுவலகத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் மறைந்த உறுப்பினா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Advertisement
ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், ரமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாஸ்கரன், மாவட்ட முன்னாள் குழந்தைகள் குழுமத் தலைவா் வின்சென்ட், ஆசிரியா் ஜான்பாக்கியம், பெல்லா நிறுவன மேலாளா் கவுரப்பன், தமிழ்நாடு கிராம வங்கி கிருஷ்ணகிரி கிளை மேலாளா் அசோகன், பொறியாளா் ஸ்டான்லி சகாயராஜ் ஆகியோா் பங்கேற்று வாரிசுகளுக்கு வாழ்க்கை பாதுகாப்பு நிதியை வழங்கினா்.
அதன்படி, 1071 உறுப்பினா்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், விபத்தில் நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகள் 4 உறுப்பினா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும், இயற்கை மரணமடைந்த 1,071 உறுப்பினா்களின் இறுதிச் சடங்கிற்காக தலா ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 5.89 கோடி வாழ்க்கை பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டன.