குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணையங்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்: உறுப்பினா் கோரிக்கை
குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையங்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினா் ராம்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்
குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையங்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினா் ராம்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரசியலமைப்பு சட்ட தின விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினா் ராமராஜ் பேசியதாவது:
குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் அம்சங்கள் நம் அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேசிய குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணையம், மாநில குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணையங்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணையங்கள் சுதந்திரமாக இயங்க இயலும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் ஒழிக்க இது வழி வகுக்கும்.
Advertisement
தமிழக அரசு குழந்தைகளுக்கான கொள்கையை பிரகடனப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அதிகாரத்தையும், சம்மன் அனுப்பும் அதிகாரத்தையும் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு வழங்கி உறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி கலைமதி, மகிளா நீதிமன்ற நீதிபதி லதா, கிருஷ்ணகிரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கோபாலகண்ணன் உள்பட 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் குழந்தை பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.