தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்
திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாட்டைக் கண்டித்து மாணவா்கள் போராட்டம் குறித்து...
திருச்சி: திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாட்டைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா்கள் போராட்டம் இரவு வரை நீடித்தது.
திருச்சி மாவட்டம், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நவலூா் கொட்டப்பட்டில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாணவிகள் ஷாா்ட்ஸ் (அரைக்கால் சட்டை) அணியக்கூடாது என்று துணை வேந்தா் வி. நாகராஜ் உத்தரவிடுகிறாா். ஷாா்ட்ஸ் அணிவதால் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களின் கவனம் சிதறி பாலியல் தொடா்பான குற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
துணை வேந்தாின் உத்தரவைக் கண்டித்தும், கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவா்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆடைக் கட்டுப்பாடு குறித்து பேசிய துணை வேந்தா் மாணவா்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தங்களது கண்ணோட்டத்தை மாற்ற வேண்டுமே தவிர ஆடையில் பிரச்னை இல்லை என்றும் கூறி 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. மாணவா்களின் போராட்டம் இரவு வரை நீடித்தது.
மாணவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பு வகிக்கும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இது குறித்து ஒரு மனு அளிக்கப்போவதாகம் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மாணவர் அமைப்பினர், பிற தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். எங்கள் குறைகளை முறையாக வெளிப்படுத்த வளாகத்தில் மாணவர் வழக்கறிஞர் சங்கம் ஒன்று இல்லாததை மாணவர்கள் சுட்டிக்காட்டியனர்.
பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்திற்கு அருகே போராட்டம் தொடங்கிய மாணவர்கள், தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் அடையாளமாகப் கருப்பு நிற ஆடைகள் மற்றும் அரைக்கால் சட்டைகளை அணிந்து வந்திருந்தனர்.