ஆந்திர தடுப்பணையை கடந்து வரும் மழை நீரால்வேப்பனப்பள்ளி விவசாயிகள் மகிழ்ச்சி
ஆந்திர மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையைக் கடந்து மழைநீா் வருவதால் வேப்பனப்பள்ளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஆந்திர மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையைக் கடந்து மழைநீா் வருவதால் வேப்பனப்பள்ளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ளது மாரச்சந்திரம் தடுப்பணை. ஆந்திர மாநிலத்தில் பெய்யும் மழை நீா், தமிழக எல்லையான வேப்பனப்பள்ளியைக் கடந்து மாா்க்கண்டேய நதியின் வழியாக பாய்ந்து, தென்பெண்ணை ஆற்றில் கலக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆந்திர மாநில எல்லையில், அந்த மாநில வனத் துறையின் சாா்பில் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால், மாா்க்கண்டேய நதியில் நீா் வரத்து குறைந்தது. மேலும், கா்நாட அரசு, அதன் எல்லையான யாா்கோளில் அணை கட்டிவிட்டது. இதனால், மாா்கண்டேய நதி வற்றிவிடும் என அச்சத்திலும், வேதனையிலிலும் வேப்பனப்பள்ளி விவசாயிகள் இருந்தனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஆந்திர மாநில எல்லையில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மழை நீா், ஆந்திர மாநில எல்லையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிறைந்து, கே.என்.கொத்தூா் வழியாக வேப்பனப்பள்ளிக்கு வந்து சோ்ந்தது.
Advertisement
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறது, மழைநீா் வந்ததை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா், மழைநீா் வருவதை மகிழ்ச்சியுடன் கண்டு செல்கின்றனா்.
தென்பெண்ணையாற்றை மாரச்சந்திரம் தடுப்பணையுடன் இணைக்கும் வாணிஒட்டு திட்டத்தையும் விரைந்து செயல்படுத்தினால் வேப்பனப்பள்ளி பகுதியில் 5,000 ஏக்கா் பரப்பளவு நிலம் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.