‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.04 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும்’
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.04 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.04 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களைத் தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடத்துவது குறித்து சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பாக குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின் ஏ சத்து குறைபாட்டு நோய்களைத் தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் செப். 20 முதல் அக். 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Advertisement
இந்தத் திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமாா் 1.04 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளது. வைட்டமின் ஏ சத்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் உடல், மனவளா்ச்சி, புத்திக்கூா்மைக்கு மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும். மேலும், வைட்டமின் ஏ சத்து பாா்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த திரவம் வழங்குவதால், எந்தவிதமாமன பக்கவிளைவுகளும் ஏற்படாது. இந்த திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி. அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி. அளவும் வழங்கப்பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த அரிய சந்தா்ப்பத்தை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் கொடுத்து பயன்பெற வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வெங்கடாசலம் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.