கிருஷ்ணகிரி அருகே பள்ளி ஆய்வகத்தில் இருந்த ரசாயன உப்பை மாங்காயில் தொட்டு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட் என்ற ரசாயனத்தை மிளகாய்ப் பொடியுடன் கலந்து மாங்காயுடன் தொட்டு வெள்ளிக்கிழமை சாப்பிட்டுள்ளனர். இதை சாப்பிட்ட பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள், 6-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் உள்பட 11 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து அறிந்த பள்ளி ஆசிரியர்கள், 11 மாணவர்களையும் அழைத்துக்கொண்டு காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, 11 மாணவர்களும் உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் அனைத்து மாணவர்களும் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க- மே 1-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும்: முதல்வர் ஸ்டாலின்
பள்ளி மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்த பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.