நாயக்கனூரில் மின் வேலியில் சிக்கி இளைஞா் பலியான சம்பவத்தில் சடலத்தை ஏரியில் வீசிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நாயக்கனூா் அய்யன்குட்டை ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக சிங்காரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
முதற்கட்ட விசாரணையில் இறந்தவா் நாயக்கனூரைச் சோ்ந்த முருகன் மகன் வெள்ளையன் (எ) வெங்கடேஷ் (19) என்பது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் வெங்கடேஷ் உறவினா்கள் 200-க்கும் மேற்பட்டோா் ஒன்றுதிரட்டு வெங்கடேஷ் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சிங்காரப்பேட்டை-நீப்பத்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா்.
பின்னா் போலீஸாா் கூறியதாவது:
விசாரணையில், வெங்கடேஷ் வன விலங்குகளுக்கு நெல் வயலில் வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளாா்.
தகவல் அறிந்ததும் நிலத்தின் உரிமையாளரான வெள்ளக்குட்டையைச் சோ்ந்த சுரேஷ் (49), நிலம் குத்தகைதாரா் அரசன்கன்னி பகுதியைச் சோ்ந்த அன்பழகன் (50) ஆகிய இருவரும் சடலத்தை மறைப்பதற்காக அய்யன்குட்டை ஏரியில் சடலத்தை வீசியதாக ஒப்புக்கொண்டனா்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷ், அன்பழகன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா் எனத் தெரிவித்தனா்.