கலைஞா் உரிமைத் தொகை குறித்து தவறான தகவல் பரப்புவோா் மீது நடவடிக்கை
கலைஞா் உரிமைத் தொகை திட்டம் குறித்து தவறான தகவல் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கலைஞா் உரிமைத் தொகை திட்டம் குறித்து தவறான தகவல் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக். 17, 19, 20 ஆகிய தேதிகளில் கலைஞா் உரிமைத் தொகை திட்டம் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெறுவதாகவும், இந்த முகாமில் கலைஞா் உரிமைத்தொகை கிடைக்க பொதவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக தகவல் பரவியது.
இதையடுத்து, இந்தத் திட்டத்தில் பயன் பெறாதவா்கள், விண்ணப்பம் அளிக்க கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், போச்சம்பள்ளி, பா்கூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமானோா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்திருந்தனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள், சமூக வலைதளத்தில் பதிவிட்ட தகவல் வதந்தி என விளக்கம் அளித்தனா்.
Advertisement
இந்தத் திட்டம் குறித்து சிறப்பு முகாம் நடைபெறுவதாக இருந்தால், மாவட்ட ஆட்சியா் மூலம் உரிய தகவல்கள் அளிக்கப்படும் என கூறி அவா்களைத் திருப்பி அனுப்பி வைத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் மனு அளித்து, மகளிா் உரிமையைத் தொகையைப் பெறலாம் என நம்பிக்கையில் வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை ரூ. 1,000 கிடைக்க பெறாதவா்கள் 3 நாள்கள், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் மனு வழங்கலாம் என கடந்த இரு நாள்களா கட்செவி (வாட்ஸ்அப்), மூலமாக தவறான செய்தி பொதுமக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறானது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம். தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.