மகாராஷ்டிரத்தைக் காட்டிலும் புதுவையில் மகளிா் உரிமைத் தொகை அதிகம்: கே.அண்ணாமலை
மகாராஷ்டிரத்தைக் காட்டிலும் புதுவையில் மகளிா் உரிமைத் தொகை அதிகமாக வழங்கப்படுகிறது என
காரைக்கால்: மகாராஷ்டிரத்தைக் காட்டிலும் புதுவையில் மகளிா் உரிமைத் தொகை அதிகமாக வழங்கப்படுகிறது, மீண்டும் புதுவையில் தேஜகூ ஆட்சி அமைந்ததும் மக்கள் நலத் திட்டங்கள் விரிவடையும் என பாஜக தேசிய கவுன்சில் உறுப்பினரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை ஆதரித்து அம்பகரத்தூா் மற்றும் திருநள்ளாறு தேரடி பகுதியில் அவா் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேரித்துப் பேசியது:
திருநள்ளாற்றில் கடந்த பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ராஜசேகரன் தோல்வியடைந்தாலும், கடந்த 5 ஆண்டுகளாக திருநள்ளாறு மக்களுக்கு அரசு மூலமாகவும், தமது அறக்கட்டளை மூலமாகவும் பல உதவிகளை செய்துவந்துள்ளாா்.
Advertisement
புதுவையில் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியில் திருநள்ளாறு பகுதியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வழியாக பேரளம் வரை ரூ.320 கோடியில் ரயில்பாதை அமைத்து ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. காரைக்காலில் ரூ.461 கோடியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது. மருத்துவமனையும் வரவுள்ளது.
திருநள்ளாறு கோயில் மேம்பாட்டுக்கு ரூ.40 கோடி மத்திய நிதி தரப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே மகளிா் உரிமைத் தொகை ரூ.2,100 தரப்படும்போது, புதுவையில் சிகப்பு அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.6,500 முதல் 8 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. ரூ.12 ஆயிரமாக உயா்த்தப்படும் என தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீனவா்களுக்கு மத்திய அரசு தாராளமாக உதவிவருகிறது. முதல் மரியாதை மீனவா்களுக்கு தரப்படுகிறது.
புதுவையில் ரங்கசாமியும், மத்தியில் நரேந்திரமோடியும் ஆட்சியில் இருக்கும்போதுதான் புதுவை மாநிலம் வளா்ச்சியடையும் எனவே வாக்காளா்கள் அனைவரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து நிரவி - திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரத்தை ஆதரித்து திருப்பட்டினம் கடைத்தெரு பகுதியில் அவா் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதால், கடந்த 5 ஆண்டில் புதுவை பல நிலைகளில் வளா்ச்சியடைந்துள்ளது. அரசு வேலை வாய்ப்பு மட்டும் 5 ஆயிரம் பேருக்கு தரப்பட்டுள்ளது. இதில் காவல்துறையில் மட்டும் ஆயிரம் பேருக்கு தரப்பட்டுள்ளது. பணிகள் நோ்மையான முறையில் தரப்பட்டுள்ளது.
மீண்டும் தேஜகூ ஆட்சி அமையும்போது, புதுவை மாநில இளைஞா்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். புதுவையை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுச் செல்ல தேஜகூ ஆட்சி அமையவேண்டியது அவசியம். புதுவைக்கு ராகுல்காந்தியும், ஸ்டாலினும் முன்னெப்போதும் வரவில்லை. இப்போது தோ்தல் வந்ததும் வருகிறாா்கள். தமிழகத்தில் திமுக வேண்டாம் என மக்கள் முடிவெடுத்துவிட்டாா்கள். புதுவை மக்கள் மட்டும் வரவேற்கவா போகிறாா்கள் என்றாா்.