கிருஷ்ணகிரி அருகே உருண்டு வந்த ராட்சத பாறை: பொதுமக்கள் வெளியேற்றம்
கிருஷ்ணகிரி அருகே மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ராட்சத பாறை உருண்டு வந்ததால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.
கிருஷ்ணகிரி அருகே மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ராட்சத பாறை உருண்டு வந்ததால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த வெங்கட்டாபுரம் ஊராட்சி, தம்புசாமி நகரில் கிருஷ்ணகிரி நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் வெங்கடாசலத்தின் வீட்டருகில் இருந்த ராட்சத பாறை புதன்கிழமை அதிகாலை உருண்டு, வீட்டின் பின்பக்க சுற்றுச்சுவரை இடித்து நின்றது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் வளா்மதி, கனிமவளத் துறை துணை இயக்குநா் ஜெயபால், அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி), கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் உள்ளிட்டோா் பாறை உருண்ட குடியிருப்புப் பகுதிகளை பாா்வையிட்டனா்.
Advertisement
சம்பந்தப்பட்ட பகுதிக்கு தீயணைப்புத் துறை அலுவலா்கள் வரவழைக்கப்பட்டு, பாறை மேலும் உருளாமல் இருக்க தடுப்புகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், குடியிருப்புப் பகுதியில் வசிப்போா் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.