கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2,835 கன அடி தண்ணீா் திறப்பு
கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 2,835 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 2,835 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஒசூரைச் சுற்றியுள்ள பகுதிகள், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.40 அடியை எட்டியது.
புதன்கிழமை 3,428 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 2,587 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் 2,600 கன அடியிலிருந்து 2,835 கன அடி அதிகரிக்கப்பட்டது.
Advertisement
இதனால் கிருஷ்ணகிரி அணை பூங்காவுக்கு செல்லும் தரை பாலம் நீரில் முழ்கியது. அணைக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் வரை 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3 ஆவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆறு மற்றும் நீா்நிலைகளைக் கடக்கவோ, கால்நடைகளை ஆற்று பகுதிகளுக்கு கொண்டு செல்லவோ கூடாது என நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.