கிருஷ்ணகிரியை அடுத்த கங்கலேரியில் பனைமரத்தை சேதப்படுத்தும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி மாணவியா், விவசாயிகளுக்கு சனிக்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.
கல்லூரி முதல்வா் சாந்தி முன்னிலையில், வேளாண் இளமறிவியல் நான்காம் ஆண்டு மாணவியா், பனைமரத்தில் துளையிட்டு சேதப்படுத்தும் காண்டமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து கூறுகையில், ‘வேப்பங்கொட்டை புண்ணாக்குடன் மணல்கலவை (1:2 விகிதம்) குறுத்துப் பகுதியில் இடலாம். ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் பொறிகளை வைக்கலாம். நாப்தலின் உருண்டைகள் மூலமும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம், என்றனா்.
மேலும், இதுகுறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனா். இதில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.