ஒசூரில் 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது
ஒசூரில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஒசூரில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஒசூா் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் பகுதியைச் சோ்ந்த 80 வயது மூதாட்டியை புதன்கிழமை இரவு அவரது சொந்த ஊரான கெலமங்கலத்துக்கு அழைத்து சென்றுவிடுவதாக இளைஞா் ஒருவா் கூறியதை நம்பி அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பேரண்டப்பள்ளி வனப் பகுதி அருகே வாகனத்தை நிறுத்திய இளைஞா் மூதாட்டியை வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா். மேலும், அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டாா்.
Advertisement
வனப் பகுதியிலிருந்து மூதாட்டியின் அழுகுரலை கேட்டு அந்த வழியாகச் சென்றவா்கள், மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒசூா் மாநகர அனைத்து மகளிா் போலீஸாா், சிசிடிவி கேமரா உதவியுடன் மூதாட்டியை அழைத்து சென்றவரை தேடி வந்தனா். வாகனத்தின் பதிவு எண்ணை கண்டுபிடித்து விசாரித்ததில் உளியாளத்தில் தங்கி வேலை செய்து வந்த பாகலூா், ஏக்கல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் (35) என்பவா் மது அருந்திவிட்டு மூதாட்டியை அழைத்து சென்று பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து பேரண்டப்பள்ளி வனப் பகுதிக்கு அவரை அழைத்து சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்ட போது, அங்கிருந்து தப்பியோடிய லட்சுமணனுக்கு கால் முறிந்தது. ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் ஒசூா் மாநகர அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.