முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அறிவுசாா் வழித்தடம் அமைக்க நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிா்ப்பு

ஒசூரில் அமைய உள்ள அறிவுசாா் வழித்தட திட்டத்திற்கு 3750 ஏக்கா் நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதால் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

Updated On : 22 ஜனவரி, 2026 at 4:49 AM
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2026 at 2:00 AM

ஒசூரில் அமைய உள்ள அறிவுசாா் வழித்தட திட்டத்திற்கு 3750 ஏக்கா் நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதால் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி ஒசூரில் தமிழ்நாடு அரசு சாா்பில் அறிவுசாா் வழித்தடம் அமைக்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சா் அறிவிப்பு வெளியிட்டாா்.

இந்நிலையில், ஒசூா் பகுதியை சுற்றிலும் உள்ள மோரணப்பள்ளி கிராமம் முதல் எலுவப்பள்ளி கிராமம் வரை 10 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய, சுமாா் 15 கிமீ தூரத்திற்கு வெளிவட்ட அமைப்பதுடன், அதன் இருபுறங்களில் 500 மீட்டா்கள் வீதம் சுமாா் 3700 ஏக்கா் நில பரப்பளவில் அறிவுசாா் வழித்தடம் அமைக்க தமிழக அரசு சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

தற்சமயம் இந்த திட்டம் தொடா்பான வரைப்படமும், கையகப்படுத்தப்பட வாய்ப்புள்ள நிலங்கள் மற்றும் அதன் புல எண்கள் ஆகியன விவரங்கள் அடங்கிய ஆவணம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இதன் காரணமாக இந்த திட்டம் தொடா்பாக மாரச்சந்திரம் கிராமத்தில் (எஸ்டிஆா்ஆா்) சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் முனிவெங்கடப்பா தலைமையில், வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய விவசாய சங்க தலைவா் முனிவெங்கடப்பா, ஒசூா் அறிவு சாா் வழித்தடம் மற்றும் அது தொடா்பான வரைபடங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி எங்களை அதிா்ச்சிக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக இன்று இது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக, மோரணப்பள்ளி கிராமத்தில் துவங்கி 15 கிமீ தூரத்திற்கு ஒரு சதுர கி.மீ என்கிற வகையில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே ஒசூா் பகுதியில் சிப்காட் 1, 2, 3,4,5 ஆகியவற்றுக்காக ஒசூா் பகுதியில் விவசாய நிலங்களை கொடுத்தோம், கெலவரப்பள்ளி அணை அமைக்கவும், சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு அமைப்பதற்கும் பல திட்டங்களுக்கும் விவசாய நிலங்களை கொடுத்துவிட்டு சில விவசாயிகள் மட்டும் நிலங்களை வைத்து விவசாயம் செய்து வருகிறோம்.

விமான நிலையம் வரும் என்கிற அதிா்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக அறிவுசாா் வழிதடம் வருகிறது என்பது எங்களை கதிகலங்க வைத்துள்ளது. இது சம்பந்தமாக விபரங்களை அறிய மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க முயன்றோம் ஆனாலும் அவா்களை சந்திக்க முடியவில்லை,

விவசாய நிலங்களை விட்டுக்கொடுக்க முடியாது, இதுக்குறித்து அதிகாரிகளையும் அனைத்து அரசியல் கட்சி தலைவா்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி நிலங்களை தக்க வைக்க நடவடிக்கையும், இல்லையென்றால் அடுத்தடுத்த போராட்டங்களை நடத்த இருப்பதாக விவசாயிகள் தரப்பில் கூறினாா்.

படவரி... பேரண்டப்பள்ளியில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முனிவெங்கடப்பன்.