நாமகிரிப்பேட்டை வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு பசுந்தாள் உர பயிர் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
இதை விவசாயிகள் பெற்று பயனடைய வேண்டுமென நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொ.அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பயிர் மேலாண்மையில் விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் உரம் இடுதல் மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தேவைப்படாத காலகட்டங்களில், தேவைக்கும் அதிகமாக ரசாயன உரங்கள் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருவதால் மண் வளம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையைத் தவிர்த்திட, மண் பரிசோதனை செய்தல், உயிர் உரங்கள், நுண் சத்துக்கள், உயிரியல் பூஞ்சானக்கொல்லிகள், ஒட்டுண்ணிகள் ஆகியவற்றின் பயன்பாட்டை அதிகப்படுத்திட வேண்டும். தேவைக்கு ஏற்ப மட்டும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். இதன் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்து மண் வளத்தை மேம்படுத்திட விவசாயிகளுக்கு மானியம் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பசுந்தாள் உர பயிர் சாகுபடி செய்து, மண் வளத்தை மேம்படுத்திட வேண்டிய அவசியம் உள்ள விவசாயிகள் 1 ஹெக்டேருக்கு 50 கிலோ பசுந்தாள் உர விதைகளை அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்து பயன்படுத்திடவும், அவ்வாறு கொள்முதல் செய்த விதைகளுக்கான ரொக்கப் பட்டியல்களை தேவையான இதர வருவாய் ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கொடுத்து அரசு வழங்கும் 50 சதம் பின்னேற்பு மானியத் தொகையான ஹெக்டேருக்கு ரூ.1500 பெற்று பயனடையலாம். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை பெற்றிட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன் அடையலாம்.