பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம்: நெல் சம்பா பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல், சம்பா, பயிருக்கான காப்பீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது என
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல், சம்பா, பயிருக்கான காப்பீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது என வேளாண்மை துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லிமலை வட்டார வேளாண்மை துறை சார்பில், வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி, பொது சேவை மைய அமைப்பாளர்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கந்தசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குநர்கள் கணேசன், சுப்பிரமணி ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
இதில் பேசிய மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் கந்தசாமி, மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில், நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் தங்களை இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஏதுவாக, அனைத்து தேசிய வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், காப்பீடு செய்ய உள்ள விவசாயிகள் தங்களின் நில உடமை சான்று, ஆதார் எண், வங்கிக் கணக்கு புத்தகப் பதிவு, போன்ற ஆவணங்களுடன் பதிவு செய்யும் இடங்களில் ஏதெனும் ஒன்றுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகளும் தங்களை காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். மேலும், குத்தகைக்கு சாகுபாடி செய்யும் நபர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். மிகக் குறைந்த பிரீமியம் தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.395 மட்டும் செலுத்தி அதிகபட்ச காப்பீட்டை பெறுவதற்கான வாய்ப்பாக அமையும் என்றார்.
பொது சேவை மையத்தில் பதிவு செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள பொது சேவை மையங்களையோ, அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அணுகி போதிய விவரங்களுடன் சேவைகளை பெற்றிடலாம்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் கெüதமன், கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.