வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 2.50 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் முல்லை நகரைச் சேர்ந்தவர் இளங்கோ (62). இவரது மகன் சரவணன். இவருக்கு லண்டனில் வேலை வாங்கித் தருவதாக நாமக்கல் அருகே உள்ள வேப்பனம் காலனியைச் சேர்ந்த வேலாயுதம் (58), ஆலம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (41) ஆகிய இருவரும் கடந்த 2013-ஆம் ஆண்டு ரூ. 2.50 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுவரை வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் இருவரும் ஏமாற்றி வந்ததாகத் தெரிகிறது. எனவே, இதுகுறித்து இளங்கோ நாமக்கல் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரிலும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.50 லட்சம் மோசடி செய்ததாக வேலாயுதம், ஆறுமுகம் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.