எருமப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒன்றாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். இதனால் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வந்த மருத்துவர்களை அந்தப் பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோம்பை தொட்டிய தெருவைச் சேர்ந்த தம்பதியர் சுந்தர்ராஜன் (28), கலையரசி(25). இவர்களுடைய மகள் பிரீத்தி(8), மகன் பிரவீன்(6) ஆகியோர் அண்மையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து பெற்றோர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருவரையும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் புதன்கிழமை உயிரிழந்தார். சிறுமி பிரீத்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவலை அறிந்த எருமப்பட்டி வட்டார மருத்துவர்கள் அந்தப் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வந்தனர்.
அவர்களை தொட்டியதெரு பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த சேந்தமங்கலம் வட்டாட்சியர் செல்வராஜ், எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் பொதுமக்களை சமாதானம் செய்து சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை மீட்டனர்.