கபிலர்மலை அருகே சிறுகிணத்துப்பாளையத்தில் கூலித் தொழிலாளி வீட்டில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.
சிறுகிணத்துப்பாளையத்தில் வசித்து வருபவர் நாகராஜ் (60). இவர், கூலி வேலை செய்து வருகிறார். இவர், சனிக்கிழமை வேலைக்குச் சென்றிருந்தபோது அவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், தீயை அணைக்க முயன்றனர். தீ அதிகமாக பரவியதையடுத்து கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை வீட்டிலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.