உலக தமிழ்ச் சங்கத்தின் கீழ் 100 தமிழ்ச் சங்கங்களைக் கொண்டுவர திட்டம்: அமைச்சர் க.பாண்டியராஜன்
உலக தமிழ்ச் சங்கத்தின் கீழ் 100 தமிழ்ச் சங்கங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு
உலக தமிழ்ச் சங்கத்தின் கீழ் 100 தமிழ்ச் சங்கங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்தார்.
நாமக்கல் தமிழ்ச் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழா சிந்தனை முழக்கம் என்ற கருத்தரங்கு நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
இந்தியாவில் தமிழ் பேசுபவர்கள் சுமார் 10 கோடி. இதுதவிர, வெளிநாடுகளில் 1.36 கோடி பேர் தமிழ் பேசுபவர்களாக உள்ளனர். உலக அளவில் தமிழ்மொழி 16ஆவது இடத்தில் உள்ளது. தமிழ் மொழியை 4 ஆண்டுகளுக்குள் முதல் 10 மொழிகளில் ஒன்றாகக் கொண்டு வர முயற்சி எடுப்போம்.
உலகத்தில் உள்ள 238 நாடுகளில் தமிழர்கள் 144 நாடுகளில் வசிக்கின்றனர். குறிப்பாக 17 நாடுகளில் 1 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் பிறமொழியை தாய்
மொழியாகக் கொண்டோர், தமிழ் கற்றுக்கொள்வதை எளிமைப்படுத்தினால், தமிழ் மொழியை உலகெங்கும் எளிதில் பரவச்செய்ய முடியும்.
கற்பிக்கும் பாடத் திட்டங்களை எளிமைப்படுத்தினால், தமிழ் மொழியைப் பிற மொழியினரும் கற்க முன்வருவார்கள். மொழியைக் கற்றுக்கொடுப்பதும் ஒருவகையில் திறன் வளர்ப்பே ஆகும். ஹிந்தி மொழியை மிகவும் எளிமைப்படுத்தி, இந்தி பிரசார சபாவின் மூலம் இந்தியை தாய்மொழியாக கொள்ளாத 35 கோடி பேருக்கு கற்பித்துள்ளனர்.
இந்தி பிரசார சபா போன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர் மையம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களைக் கொண்ட 17 நாடுகளில் இம்மையத்தின் கிளை உருவாக்கப்பட்டு, அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்குத் தமிழைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
நாமக்கல்லில் உயிரோட்டம் உள்ள அருங்காட்சியகம் அமைக்கப்படும். உலக தமிழ்ச் சங்கத்தின் கீழ் 100 தமிழ்ச் சங்கங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். தமிழகம் மட்டுமல்லாது 10,000 தமிழ் மக்களுக்கு மேல் வசிக்கும் நாடுகளில் இருந்தும் தமிழ்ச் சங்கங்களை இந்தப் பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான தமிழ்ச் சங்கங்கள் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்றார்.
விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியது:
நாமக்கல் தமிழ்ச் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் சங்க நிர்வாகிகளுடன் நானும் உடன் இருப்பேன். நாமக்கல் நகரின் குடிநீர் பிரச்னை குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டது. ரூ. 135 கோடி செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் நாமக்கல் நகராட்சிக்கென தனியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாமக்கல் நகருக்கு எந்தக் காலத்திலும் குடிநீர் பிரச்னை ஏற்படாது என்றார்.
சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ. சரோஜா, நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், உலக தமிழ்ச்சங்க இயக்குநர் க.மு. சேகர் ஆகியோர் பேசினர்.
நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் ரா.குழந்தைவேல் தலைமை வகித்தார். அமைப்புத் தலைவர் அரசு பரமேஸ்வரன், மதிப்புறு தலைவர் வி.சத்தியமூர்த்தி, செயலர் கோபாலா. நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.